கொழுந்தெடுக்கும் எம் குடியின்
கொடுமைகள் விரியக் கண்டும்
கொளுந்துவிட்டு குலமகளோ
அனுதினம் எரிதல் கண்டும்
மடமையின் நுனிக் கரையில் -தம்
மக்கள் துடிக்கக் கண்டும்
வறுமையின் பனிக் குழியில்
சமூகமே தவிக்கக் கண்டும்
தலைமையென்று வேஷமிட்டு
புலமையற்ற கோஷமிட்டு
செயற் திறனற்றவர்கள்
விலை மாதருக் கீழே தான்
கண்ணீரை சூடேற்றி
காயத்தின் மீதூற்றி
கயவர்க்காய் துணைப் போகும்
யாவருக்கும் இதுவேதான்….
குலமக்கள் குளம் நடுவில்
குமுறியழும் குரல் கேட்டும்
குதூகலமே நம் வேலை – எனும்
இளசுகளும் அதுவேதான்….
கரை பிடிக்க நமக்குள்ள
கல்வியெனும் துறை முறையை
கலவிக்கும் காசுக்கும் உருமாற்றும்
குரு குலமும் இதுவேதான்….
மலையகத்தின் மாற்றம்
உருவாக்க கூட்டம்
வெளி வரும் தாக்கம்
சீக்கிரம் ஆக்கம் …………..
மலைத்தாயின் தவப் புதல்வன்
அருண் வெங்கடேஷ்